டார்ஜீலிங்கில் எனது முதல் நாள்!

தனிமையுடன் மேற்குவங்க-சிக்கிம் பயணம்
(பயணக்கட்டுரை)

பயணம்: மேற்கு வங்காளம் - சிக்கிம்
பகுதி: 04 முதல் நாள் - டார்ஜீலிங்கில் நான் 

நான்மாடக் கூடல் நகர் துவங்கி மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் வரை தனியே பயணித்த அனுபவத்தொகுப்பின் நான்காம் பகுதிக்கு உங்கள் அனைவரையும் தாய்தமிழை வணங்கி அன்புடன் வரவேற்கிறேன்.

தி வில்லேஜ் - ஹோம் ஸ்டே, கூம்
ரவியை நான் சந்திப்பது இதுவே முதல்முறை, இருப்பினும் மிகவும் சகஜமாக நடந்துகொண்டார். அவரது நண்பரும் அப்படியே, இருவரும் என் பயணத்தை பற்றி விசாரித்தனர். உடலைத் துளைத்து மனதை தொட்டது அந்த உறையவைக்கும் பனி காற்று. இருள் அனைத்தையும் ஏற்கெனவே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

மெல்ல இருளில் முன்னேறி  நடந்து கொண்டிருந்தோம். கூம் நகரின் மலைச்சரிவில் தேயிலை தோட்டங்களின் மத்தியில் இயற்கை சூழ  அவரது இல்லம் அமைத்திருந்தது. ஆகவே சரிவுப் பாதையில் செல்ல வேண்டியிருந்தது.பாதை சரிவாக இருந்ததால் நடக்க சற்று சிரமமாக இருந்தது மேன்மேலும் புவியீர்ப்பு என்னை முன்னோக்கி தள்ளிக்கொண்டு சென்றது.

இருள் - குளிர் - சவாலான பாதை என கடினமாக அமைந்தது அந்த நடைபயணம். பல்வேறு வீடுகள், படிகள், சரிவுப்பாதை என இருபது நிமிடங்கள் நீண்டது. இருதியாக மக்கள் வசிக்கும் பகுதியை கடந்து தேயிலை தோட்டங்கள் தென்பட்டது. அதில் நீண்டது அந்த குறுகலான பாதை. எங்களிடம் இருந்து கைபேசியில் உள்ள விளக்குகளின் ஒளி மற்றும் ரவியின் குரல் மட்டுமே எங்களை வழிநடத்தியது.

ரவி என்னிடம் அவரது இல்லத்திற்கு வேறொரு சுற்றுப்பாதை இருபத்தாகவும் ஆனால் இரவில் அது சவாலாக இருக்கும் என்பதால் இதில் அழைத்து செல்வதாக கூறினார். சற்று முன்னேறி சென்றபோது தூரத்தில் இருந்து ஒரு வீட்டிலிருந்து ஒரு குட்டி நாய் கத்திக்கொண்டே ஓடிவந்து ரவியின் கால்களை சுற்றியது. குறிப்பால் இல்லத்தை அடைந்து விட்டோம் என்பதை உணர்ந்தேன்.

இறுதியில் நண்பர் ரவியின் "தி வில்லேஜ் - The Village" ஹோம் ஸ்டேவிற்குள் (Homestay) நுழைந்தேன்.

சில நிமிடங்களில் எனது அறையை தயார்செய்து அங்கே சென்று ஓய்வெடுக்கும்படி கூறினார் ரவியின் மற்றுமொரு நண்பர். உடைகளை மாற்றிக்கொண்டு, சற்று நேரம் ஓய்வெடுக்க துவங்கினேன். மணி ஏழு  ஆகியிருந்தது, மலை பிரதேசம் என்பதால் ஏழு மணிக்கெல்லாம் ஊரே அடங்கிபோய் இருந்தது.

எனது படுக்கை

பைன் மர அறைகள்

அலமாரி - புத்தகங்கள்
எங்கும் நிலவியது நிசப்தம், காடுகளில் விதவிதமான ஒலிகள் மனதில் பல்வேறு எண்ண அலைகளை உருவாக்கியது. அறையை விட்டு வெளியே வந்து மாடம் போன்ற ஒரு இடத்தில் நின்று அழகிய நிலவொளியில் காடுகளில் அடுக்குகளை கண்டேன். மனமும் உயிரும் புத்துணர்வு பெற்றது, ஏதோ சில பாடல்களை முணுமுணுத்து கொண்டு நின்றிருந்தேன்.

டார்ஜிலிங் சுற்றுவட்ட மலைப்பிரதேசங்களில் பெரும்பாலான வீடுகள் பைன் மரத்தை (Pine Trees) கட்டமைகப்படுகிறது. காரணம் பைன் மரங்கள் இங்கே எளிதாக கிடைப்பதும், மற்றும் அதன் நீடித்து உழைக்கும் தன்மையே. வீடுகளின் தரையும் மரங்களை கொண்டே செய்யப்படுகிறது. காரணம் மரத்தின் வெப்பம் கடத்தாத்தன்மை. ஆனால் நடக்கும் பொழுது சத்தம் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி கதைக்குள் மீண்டும், அவ்வாறாக காடுகளின் வனப்பை இரசித்து நின்றிருந்த தருணம் திடிரென யாரோ முற்றத்தை நோக்கி நடந்து வரும் ஓசை. இப்போது சிறுவயதில் கேட்ட கதைகள் நினைவில் உலாவியது, ஸஇரவில் காடுகளுக்கு இடையே தனித்த ஒரு வீட்டில் இருந்த எனக்கு அந்த சத்தம் பயம் தொற்றிக்கொள்ள காரணமாய் அமைந்தது.

நிழலில் ஒரு உருவம், என்னை நோக்கி நகர்ந்தது.   பயந்து போய் திரும்பிப் பார்த்தேன், ரவியின் நண்பர் என்னை உணவு உண்ண அழைக்க வந்தார். 
நான் அவர் பின்னே சாப்பிட சென்றேன், 
ரவி மற்றும் அவரது மற்றொரு நண்பர் உணவுக்காக அமர்ந்திருந்தனர். அன்று இரவு உணவாக சோறு, வங்காள பருப்பு குழம்பு, மற்றும் ஆலு ஆச்சார் - Aloo Achaar (உருளைக்கிழங்கு ஊறுகாய்) சமைத்திருந்தனர். இந்த வீட்டில்  ரவி மற்றும் அவரின் இரு நண்பர்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறினார்.

இரவு உணவு : சோறு, வங்காள பருப்பு குழம்பு, மற்றும் ஆலு ஆச்சார்
இரவு உணவிற்கு பிறகு வீட்டின் வாசலில் காய்ந்த விறகுகளை தீயிட்டு குளிர் காய்ந்தோம். பயணக் களைப்பு அதிகமாக இருந்தால் தூக்கம் வந்தது, அவர்களிடம் விடைபெற்று உறங்கச் செல்வதாக கூறி அவர்களிடம் விடைபெற்று அறைக்கு சென்றேன்.

கேம்ப் ஃபயர்
டார்ஜிலிங் பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலையை கருத்தில் கொண்டு எனது அறையில் மின் அறை சூடேற்றியை இயக்க வைத்திருந்தார் நண்பர் ரவி. இரவு முழுவதும் நன்றாக உறங்கினேன்.

காலை எழுந்தவுடன், இரவு நிலவொளியில் கண்ட அந்த மலைப்பாங்கை காண ஆவலுடன் வீட்டின் வெளியே வந்தேன். ஓரு நிமிடம் அப்படியே உறைந்தது போய் நின்றேன்‌. அத்தனை இரம்மியமான காட்சி அது.

அழகிய மலை வனப்பு

கண்ணுக்கெட்டிய தூரம் மலைகளை பச்சை கம்பளம் போர்த்திய வணம், பல வகையான பறவைகளின் ஓசை, இதமான குளிர்காற்று, ஆதவனின் தீண்டல் என அனைத்தையும் திகட்டத்திகட்ட அனுபவித்து நின்றேன்.

டார்ஜிலிங் மலைச் சரிவு

மலைச் சரிவு - முற்றத்தில் இருந்து

மற்றொரு பகுதி
அச்சமயம் அந்த குட்டி நாய் என்னிடம் வந்து ஒட்டிக்கொண்டது, அந்த நாய் குட்டியின் பெயர் "வின்னி" (Winny), டின் டின் (Tin Tin) எனும் கார்டூன் கதையில் வரும் அதே நாய் குட்டி இனத்தைச் சார்ந்தது எனவும் இங்கே கொண்டுவந்து சில வாரங்கள் ஆகிறது எனவும் கூறினார். இதுபோன்ற தனிமையான இடங்களில் நாயின் இன்றியமையாத தேவையை கூறினார்.
வின்னி மிகவும் சுட்டியான நாய், பழகுவதற்கு மிகவும் எளிமையான மற்றும் பாசமாக நடந்துக்கொண்டது.

வின்னி - Winny

குட்டி நாய் வின்னி
நண்பர் ரவி தனது தேயிலை தோட்டம் மற்றும் இதர இடங்களை சுற்றி காட்ட அழைத்து போவதாக கூறினார். காலாற நடக்கத் துவங்கினோம், எங்களுடன் எங்கள் முன்னும் பின்னும் வின்னி ஒடியது, மனது அந்த இயற்கையின் அழகில் புதிய புத்துணர்வு பெற்றது. ரவிக்கு சொந்தமாக தேயிலை தோட்டம், பல்வேறு வகையான மரங்கள் மற்றும் செடிகளை கண்டேன்.

நண்பர் ரவியின் தேயிலை தோட்டம்

தேயிலை தோட்டம்
ஆங்காங்கே வித்தியாசமான பறவைகளும் என்னை ஆச்சரியத்தில் வியக்கவைக்கத் தவறவில்லை. கீழே இறக்கிச் செல்ல எளிதாக இருந்தது ஆனால் திரும்பவும் மேலேறி வருவதற்கு சற்று கடினமாக இருந்தது. என்ன செய்வது என் உடல்வாகு அப்படி.


கேரம் போர்டு பவுடர் (Carrom Board Powder) தயாரிப்பில் மூலக்கூறாக பயண்படும் ஒரு சிறு தாவரத்தை என்னிடம் காட்டினார் ரவி.

கேரம் போர்டு தயாரிக்க பயன்படும் தாவரம்
முதன் முதலில் ஏலக்காய், வெள்ளி ஓக் போன்ற தாவரங்களை கண்டேன். டார்ஜீலிங் நகரத்தின் சிறப்பே தேயிலை தான், அத்தகைய தேயிலைத் தோட்டத்தின் வனப்பை கண்ட பிறகு வீட்டை அடைந்தோம்.

ஏலக்காய் தாவரம் 

பூஞ்சை

பல ண் கொடிகள்

பல ண் கொடிகள் - நேபாள பாரம்பரியம்
ரவியின் நண்பர்கள் "யுகல்" (YUGAL) மற்றும் "நிஸ்சல்" (NISCHAL) இருவரும் எங்களுக்காக தேனீர் கோப்பையுடன் காத்துக்கொண்டு இருந்தனர். சற்று இளைப்பாறிய பின்னர், தேனீர் பருகிக்கொண்டே ரவியின் தனது தங்கும் விடுதி விரிவாக்கம் மற்றும் பல்வேறு பல்வேறு புதிய திட்டங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

டார்ஜிலிங் தேநீர்

நண்பர்கள் முற்றத்தில்
தேனீர் மிகவும் இனிமையாக இருந்தது, அந்த பகுதியில் இருந்த இயற்கை வனப்பு மேலும் அந்த நேரத்தை இனிதாக்கியது. அங்கு அப்போது நிலவிய சூழல் அடடா...

தேநீர் கோப்பை
சற்று வெயிலின் கதிர்கள் எங்கும் பரவியிருந்த போதும் குளிராகவே இருந்தது. மார்கழி மாதத்தில் டார்ஜிலிங் தட்பவெப்ப நிலை சராசரியாக 5°C கீழாகவே இருக்கும். சற்று உயரமான பகுதியில் பனிப்பொழிவும் உண்டு.

கதிரவனின் கரங்கள்

எங்கும் எங்கெங்கும் பசுமை
குளிர் அதிகமாக இருந்தால் இங்கு உள்ள மக்களுக்கு அதிகம் வியர்ப்பதில்லை அதன் காரணமாக வாரத்தில் ஒன்றிரண்டு நாட்களே குளிப்பதாக கூறினார் நண்பர் ரவி. அவர் கூறியதைக் கேட்டு குளியலை தவிர்க்க வேண்டியதாயிற்று (ஆனால் பற்களை துலக்க தவறவில்லை).

சிறிது நேரத்தில் காலை உணவு தயாரானது. திருமணமாகாத ஆண் நண்பர்கள் உள்ள வீடு என்பதால் காலையில் அவர்கள் பெரும்பாலும் சமைப்பது இல்லையாம். எனக்கு காலை உணவாக பால், முட்டைகள் மற்றும் "சம்பா" (Chamba) சோளம் அல்லது கொண்டைக்கடலை மாவு கொண்ட சத்து-பாணத்தை வழங்கினார்கள். வயறு முழுதும் நிறைந்தது, கண்கள் மேலும் ஒளி பெற்றது. 

காலை உணவு - சம்பா, முட்டை மற்றும் பால்

சம்பா - சத்து பாணம்
டார்ஜிலிங் மலையில் முதல் நாள் என்பதால் எங்கெல்லாம் சுற்றி பார்க்கலாம் என்று ரவியுடன் ஆலோசனை செய்து திட்டமிட்டு தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து சுற்றிப்பார்க்க புறப்பட்டேன். மாலை இருட்டுவதற்குள் வீட்டிற்கு திரும்பி வந்துவிடுமாறு ரவி கூறினார். அவரின் நண்பர் என்னை ஈருளியில் (இருசக்கர வாகனம்) கூம் ரயில் நிலையம் வரை கொண்டு வந்து விடுவதற்காக என்னுடன் புறப்பட்டார்.

ஆனால் வின்னி எங்களை பின்தொடர்ந்தது, பலமுறை விரட்டியும்  நண்பர் நிஸ்சலின் மீதிருந்த அளவிடமுடியாத பாசத்தால் வின்னி எங்களை பின்தொடர்ந்தது பிரதான மலை சாலை வரை வந்தது. நண்பர் ஏதேதோ செய்து அதை வீட்டிற்கு விரட்டினார், பின் இருசக்கர வாகனத்தில் எங்கள் பயணத்தை துவங்கினோம்.

சற்று தூரம் பயணத்தில் எங்கள் பின்னால் வின்னி ஓடி வந்துகொண்டிருந்ததை கண்டேன், பின்னர் அங்கேயே நான் இறங்கி அங்கேயே அவர் திரும்ப வரும் வரை நின்றிருந்தேன். அந்த பகுதியில் உள்ள இயற்கை வளங்களை இரசித்தேன்.

அழகிய பூக்கள்
அச்சமயம் நிஸ்சல் வீட்டிற்கு மீண்டும் சென்று வின்னியை அங்கே விட்டு விட்டு வந்தார். நாங்கள் இருவரும் மீண்டும் எங்கள் பயணத்தை துவங்கினோம்.

சவாலான சரிவுப் பாதையில் வண்டியை செலுத்தினார், வழியெங்கும் பல வீடுகளில் ஒருவகையான வண்ணக் கொடிகள் கட்டப்பட்டிருந்தது. அதைப்பற்றி நண்பரிடம் கேட்டபோது அந்த கொடிகள் நேபாள பாரம்பரியம் எனவும் நல்ல சக்திகளை ஈர்க்கும் எனவும் கூறினார். அதனால் இந்த பகுதியில் பல வீடுகள் மற்றும் வாகனங்களில் இந்த கொடிகளை மக்கள் கட்டிவைப்பார்களாம்.

தேயிலை தோட்டம்
வாகனத்தில் செல்ல செல்ல இயற்கையின் அழகு என்னை பிரம்மிக்க வைத்தது. அழகான இயற்கை என்னை என் மனதை முழுமையாக ஆக்கிரமித்தது. பத்து நிமிட பயணத்தில் கூம் பிரதான நகரை அடைந்தோம். அங்கிருந்த ஒரு கடைவீதியில் வாகனத்தை விட்டுவிட்டு இரயில் நிலையம் நோக்கி நடந்தோம். கூம் இரயில் நிலையம் இந்தியாவின் உயர்ந்த இடத்தில் அமைந்துள்ள இரயில் நிலையம் என்பது சிறப்பு.

கூம் ரயில் நிலையம்
டார்ஜிலிங் மற்றும் அண்டை நகரங்களுக்கு அதிக அளவில் பொதுப் போக்குவரத்து (பேருந்து வசதி)  அதிகம் இல்லை, மாறாக நமது ஊரில் சேர் ஆட்டோக்களை போல இங்கு "சேர் கேப்" (Shared Cab) சேவைகள் அதிகம்.

சேர் கேப் (SHARED CAB)
குரோசங், சிலிகுரி பகுதிகளில் இருந்து டார்ஜிலிங் செல்லும் சேர் கேப்கள் அனைத்தும் கூம் ரயில் நிலையம் வழியாக தான் செல்லும். அதனால் வாகனம் வரும் வரை அங்கேயே நின்றோம் உடனடியாக ஒரு மகிழுந்து வந்தது அதை கைகளை காட்டி நிறுத்தினார் நண்பர்.

- தொடரும்...

Comments

  1. அங்கும் உதகை வால்பாறை போல தேயிலை தோட்டங்கள் அதிகமா

    ReplyDelete
    Replies
    1. டார்ஜிலிங் தேயிலை என்ற புவிசார் குறியீடு உண்டு, டார்ஜிலிங்கில் பிரதானமாக தேயிலை பயிரிடப்படுகிறது

      Delete
  2. பால் முட்டை combination super நண்பா.. 😜🐍

    ReplyDelete
  3. செந்தமிழ் நாவல் படிப்பது போல் உணர்கிறேன் உங்கள் கட்டுரையை படிக்கும் போது.💐👍

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி!

      Delete
  4. The words ur using awesome da... I feel like I'm in Dargling

    ReplyDelete
  5. Ur narration is as sweet as Darjeeling tea

    ReplyDelete
  6. உங்கள் நடை என்றைக்கும் போல உயிர்ப்புடன் இருந்தது. அதில் வியப்பொன்றுமில்லை. அதிலும் நிலவொளியில் நிழலாக ஓர் உருவம் நெருங்கும் போது தாங்கள் அடைந்த திகில் உணர்வை வாசிக்கும் எங்களுக்கும் கடத்தியதில் தங்கள் அழகுணர்ச்சி மிகுந்த நடையின் திறன் வெளிப்பட்டது. படங்கள் மெய் சேர்க்க "டின்டின்" வின்னியின் இருப்பு உண்மையில் என் மனதை தொட்டது. தகவல்கள் நிறைந்த பயணத்தொடர் தொடரட்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே!!

      Delete
  7. நாங்கள் மார்ச் மாதம் கடைசியில் செல்ல இருக்கிறோம் ஆனால் எப்படி செல்வது என்பதை பற்றி பலரிடம் விசாரித்து வருகிறோம் அதில் உங்கள் பயணக்கறிப்பு சிறப்பு நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்கிம் - டீஸ்டா நதிக்கரை ஓரத்தில்...

டார்ஜிலிங் நகர வீதிகளில்...

தனியே கொல்கத்தாவில் இரண்டாம் நாள்...